May 2025

                                    கிழக்குமண்டலம்


மசௌடி பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 95 பேர் கலந்துகொண்டனர்; சகோ. ஜான் நாகேந்திரன் இக்கூட்டங்களில் கலந்துகொண்டு, கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கித்தார். தொடர்ந்து, அக்பர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூடுகையில் 150 பேர் கலந்துகொண்டனர்; இக்கூட்டங்களில் சகோ. ஜான் நாகேந்திரன் மற்றும் சகோ. தயானந்த் ஆகியோர் தேவ செய்தியளித்தனர். 

ஜெகனாபாத் மாவட்டத்தின் மக்தம்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில், 200-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். சகோ. ஜெயபிரகாஷ், சகோ. ராகேஷ் ரவி மற்றும் சகோ. ஜெயசீலன் ஆகியோர் இக்கூடுகையில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினர். பணித்தள ஊழியங்களுக்காகவும், தேசத்தின் தேவைகளுக்காகவும் ஒருமனதுடன் இணைந்து ஜெபிக்க கர்த்தர் உதவிசெய்தார்.

கயா பணித்தளத்தில், கிழக்கு மண்டல மிஷனரிகளின் பிள்ளைகளுக்காக நடைபெற்ற கூடுகையில் 50 பிள்ளைகள் பங்கேற்றனர். சகோ. டேனி மற்றும் சகோதரி ஜெசி ஆகியோர் சிறப்பு விருந்தினராக இக்கூடுகையில் கலந்துகொண்டு, தேவசெய்தியளித்து, குழு கலந்துரையாடல்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக பிள்ளைகளை உற்சாகப்படுத்தினர். 

மிகவும் பின்தங்கிய நிலையில் வசித்துவரும் நவ்கடி கிராமத்தின் 50 பிள்ளைகளைச் சந்திக்கவும், பாடல்கள் மற்றும் வசனங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அவர்கள் இதயத்தில் விதைக்கவும் கர்த்தர் உதவிச்செய்தார். 

நவாதா மாவட்டத்தின் ரஜௌலி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்காக, நீண்ட நாட்கள் ஏறெடுக்கப்பட்டுவந்த ஜெபத்தின் பலனால், ஆலயத்திற்கான நிலத்தினை வாங்க கர்த்தர் உதவிசெய்தார்; தேவனுக்கே மகிமை!

ஜோரியா பணித்தளத்தில் கட்டப்பட்ட ஊழியர் இல்லத்தினை ஜெபத்துடன் அர்ப்பணிக்க தேவன் கிருபை செய்தார்; இந்நிகழ்ச்சியில், பணித்தள ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் கலந்துகொண்டனர்.