October 2025

                                                    கிழக்குமண்டலம்


அக்டோபர் : 01 சிவடா பணித்தளத்தில் ஆகஸ்ட் 31 அன்று ஞாயிறு ஆராதனையின்போது, சமூக விரோதிகள் சிலர் ஆலயத்தினுள் புகுந்து, ஆராதனையைத் தடுத்து, போதகரையும் மற்றும் ஆராதிக்கக் கூடிவந்திருந்த விசுவாசிகளையும் மிரட்டிச் சென்றனர்; என்றபோதிலும், கர்த்தருடைய கிருபையினால், இப்பணித்தளத்தில் ஆராதனை தடையின்றி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. இப்பணித்தளத்தில் ஊழியம் செய்துவரும் ஊழியருக்காகவும் மற்றும் பணித்தள விசுவாசிகள் விசுவாசத்தில் ஸ்திரப்படவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 02 காக்கோ பணித்தளத்தில் செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 130 பேர் கலந்துகொண்டனர். விசுவாசிகள் வசனத்திலும் மற்றும் விசுவாசத்திலும் வேரூன்ற இக்கூடுகை உதவியது. இக்கூட்டத்தில், சகோ. ஜெகன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். இப்பணித்தளத்தில், போதகர் இல்லம் மற்றும் பணித்தள ஆலயச் சுற்றுச் சுவர் விரைவில் கட்டப்படவும், விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறவும், பணித்தள ஆலய முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.  

அக்டோபர் : 03  எங்கர்சராய் பணித்தளத்தில் செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூட்டத்தில் 120 பேர் பங்கேற்றனர்; சகோதரர் அவதேஷ் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் மற்றும் ஆத்தும ஆதாயப் பணியில் அவர்களை உற்சாகப்படுத்தவும் இக்கூடுகை வழிவகுத்தது. இப்பணித்தளத்தில் நடைபெறும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், இங்கு நடைபெறும் சபை ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் மற்றும் அமைந்துள்ள நாலந்தா மாவட்டத்தில் கர்த்தர் கிரியைசெய்யவும், ஜனங்கள் உயிர்மீட்சியடையவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 04 ஹல்திகோச்சா பணித்தளத்தில் செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகையில், சபை மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு சொந்த கிராம மக்களுக்காகவும் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் தீய வழிகளிலிருந்து விடுபடவும் பாரத்துடன் ஜெபித்தனர். இக்கூடுகையில், சகோ. பால் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.   

அக்டோபர் : 05  பாலுமாத் பணித்தளத்தில் செப்டம்ர் 18 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கானக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகையில், ‘தரிசனம் தேவை’ என்ற தலைப்பின் கீழ் சகோ. பால் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற விசுவாசிகள், ஆவிக்குரிய ஜீவியத்தில் பெலப்படவும், சமுதாயத்தில் சாட்சியாக வாழவும், தங்கள் வாழ்க்கையைக் குறித்தும் மற்றும் திருச்சபையைக் குறித்தும் தரிசனத்தோடு செயல்படவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 06 நயபஜார் பணித்தளத்தில் செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான எழுப்புதல் கூட்டத்தில் 40 பேர் பங்கேற்றனர். சகோ. ரமாசங்கர் ‘தெபோரா’ மற்றும் ‘பவுல்’ ஆகியோரை மையமாகக் கொண்டு கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். இப்பணித்தளத்தில் ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் நீங்கவும், விரைவில் ஆலயம் கட்டப்படவும் ஜெபிப்போம்.  





SEP 2025

                                   கிழக்குமண்டலம்


செப்டம்பர் 01 மகாய் 2 கோட்டத்தின் மாவ் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 15 பேர் கலந்துக்கொண்டனர். சகோதரி ஜாஸ்மின் ஜெயசீலன், எபிரெயர் 12:1 வசனத்தினை மையமாகக் கொண்டு தேவச் செய்தியினைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, சகோதரி லவ்லி  மூலமாக பெண்களின் வாழ்க்கைக்கடுத்த சுகாதார விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டது. பணித்தள பெண்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும், பெண்கள் மூலமாக குடும்பங்கள் கிறிஸ்துவண்டைத் திரும்பவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 02 ஆகஸ்ட் 1 அன்று ரஜோலி பணித்தளத்தில் உபவாசக் கூடுகை நடைபெற்றது; 40 பேர் பங்கேற்று தேசத்திற்காகவும், தங்கள் பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் பாரத்தோடும் ஒருமனதோடும் தேவ சமூகத்தில் ஜெபித்தனர். இப்பணித்தளத்தில் ஆலயம் கட்டப்பட வாங்கப்பட்டுள்ள நிலத்தினைப் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மாறவும் மற்றும் ஆலயக் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படவும் ஜெபிப்போம். ஆகஸ்ட் 3 அன்று படுக்காவ் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் சகோ. சித்தார்த் கலந்துக்கொண்டு தேவ செய்தியளித்தார்; 40–திற்கும் மேற்பட்ட பெண்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். இப்பணித்தளம் அமைந்துள்ள ஹஜாரிபாத் மாவட்டத்தில் எதிர்ப்புகள் மாறவும் மற்றும் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 03 கோடர்மா பணித்தளத்தில் சீஷத்துவப் பயிற்சியினை நிறைவுசெய்த 11 மாணவர்களுக்கு நடைபெற்ற சான்றளிப்பு நிகழ்ச்சியினை கர்த்தர் ஆசீர்வதித்தார். இப்பயிற்சியினை நிறைவு செய்தவர்களில், மூன்று  மாணவர்கள் வேதாகம மேற்படிப்பிற்காக தர்பங்கா பணித்தளத்திற்குச் செல்லவிருக்கின்றனர். சீஷத்துவப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்காகவும், சபையிலும் மற்றும் சமுதாயத்திலும் அவர்கள் சாட்சியுள்ள வாழ்க்கை வாழவும் மற்றும் சீஷத்துவப் பயிற்சியில் (னுவுஊ) இந்த வருடமும் அநேக வாலிபர்கள் இணைந்து பயிற்சி பெறவும்  ஜெபிப்போம்

செப்டம்பர் 04 கயா பணித்தளத்தில் ஜெம்ஸ் ஊழியர்கள் மற்றும் தலைவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை (GILEAD) ஆகஸ்ட் 20 அன்று தொடங்க கர்த்தர் உதவிசெய்தார். இந்நிகழ்ச்சியில் சகோ. அகஸ்டின் ஜெபக்குமார், சகோ. ப்ரெடி ஜோசப், Dr. விஜய்காந்த் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினர். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இப்பயிற்சி வகுப்புகளுக்காகவும்,  பயிற்சிபெறும் ஊழியர்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் தலைவர்களுக்காகவும் ஜெபிப்போம். மகய் 1 கோட்டத்தின் பிக்ரம் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில் 70 பேர் கலந்துக்கொண்டு பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். சகோ. நந்தலால் தேவ செய்தியளித்து, ஜனங்களை ஜெபத்தில் வழி நடத்தினார். தேசத்திற்காகவும் மற்றும் எதிர்ப்புகள் நிறைந்த பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 05 ஆகஸ்ட் 14 அன்று பலித்தாத் பணித்தளத்தில் வாலிபர் கூடுகை நடைபெற்றது; 30 பேர் இக்கூடுகையில் பங்கேற்றனர். 'கர்த்தருக்குப் பிரியமாய் வாழ்வது எப்படி' என்ற தலைப்பின்கீழ் சகோ. ராஜா தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார்.  கொடுத்தார். இதுபோன்ற கூட்டங்கள் ஒவ்வொரு பணித்தளங்களிலும் நடைபெற ஜெபிப்போம். லத்திகார் பணித்தளத்தில் 'GP என்ற கிராமத்தில் உள்ள அரசாங்கப் பள்ளியில் ஆகஸ்ட் 17 அன்று நல்லொழுக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பாடல்கள் மற்றும் கதைகள் மூலமாக 50 சிறுவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது.

August 2025

                                  கிழக்குமண்டலம்


ஆகஸ்ட் 01
மகத் காலனி  பணித்தளத்தின் அருகிலுள்ள டெக்னோ பார்ம் கிராமத்தில் ஜூலை 10 அன்று நடைபெற்ற மருத்துவ விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட 40 பேருக்கு சகோதரி லவ்லி சுபம் மூலமாக மருத்துவ ஆலோசனைகளுடன், நற்செய்தியையும் அறிவித்து, அவர்களுக்காக ஜெபிக்கவும், அத்துடன், டெக்காரி மற்றும் அருவல் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூட்டங்களில் 175 பேருக்கு வேத வசனத்துடன், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கவும் கர்த்தர் உதவி செய்தார். தேவனுடைய ஆலயமாகிய சரீரத்தை ஆரோக்கியமாக வைக்க எடுக்கப்படுகின்ற இத்தகைய முயற்சிகளை தேவன் ஆசீர்வதிக்கவும், சகோதரிகள் ஜெபிப்பவர்களாகவும் அத்துடன் செயல்படுகிறவர்களாகவும் மாறவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 02 மகாய் 2 கோட்டத்தின் கயா பணித்தளத்தில், ஜூலை 5 அன்று நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 140 வாலிப சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். சென்னையைச் சேர்ந்த சகோ. ஜான் இருதயராஜ் மற்றும் 
சகோ. தயானந்தன் ஆகியோர் தேவ செய்தியளித்து, வாலிபர்களின் வாழ்க்கைக்கு ஏற்ற ஆலோசனைகளையும் வழங்கி அவர்களுக்காக ஜெபித்தனர். சகோ. ஜோஷ்வா நடத்திய பாடல், ஆராதனை, விளையாட்டு மற்றும் வேத வினாப் போட்டிகள் வாலிபரை ஆண்டவருக்குள் வேரூன்ற உதவின. அவ்வாறே, மகாய்-1 கோட்டத்தின் பேலா பணித்தளத்தில் ஜூலை 17 அன்று நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில், 37 வாலிபர் கல்ந்துகொண்டனர். யோசேப்பைப் போல எப்படி பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்ற கருப்பொருளின் கீழ், சகோ. ஜெகன் மற்றும் சகோ. தம்பிதுரை ஆகியோர் வழங்கிய செய்திக்கு, ஜெப வேளையின் போது வாலிபர் தங்களை அர்ப்பணித்தனர். வரும் நாட்களில் ஒவ்வொரு திருச்சபையிலும் வாலிபர் கூடுகைகள் நடைபெறவும் மற்றும் வாலிபர் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 03 "சந்தோஷமாயிருங்கள்" என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றுவரும் பணித்தளச் சிறுவர் ஊழியத்தின் வாயிலாக, 14,000 அதிகமான சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை எடுத்துச் சொல்லவும், கிறிஸ்துவுக்குள் அவர்களை வழிநடத்தவும் கர்த்தர் உதவி செய்தார்; தேவனுக்கே மகிமை! கடந்த மாதத்தில் ஜெம்ஸ் பள்ளிகளிலும் மற்றும் பிற பள்ளிகளிலும் எவ்விதத் தடையுமின்றி சிறுவர் ஊழியத்தினை நிறைவேற்ற கர்த்தர் கொடுத்த வாய்ப்புக்காகக் கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறோம். ஊழியர்களின் பயண பாதுகாபிற்காகவும், நல்ல காலச் சூழ்நிலைகளுக்காகவும், எந்தெந்த கிராமங்களில் சிறுவர் ஊழியங்கள்  நடைபெற்றதோ, அந்தந்தக் கிராமங்களில் ஆராதனை கூடுகை நடைபெறவும் ஜெபிப்போம் .

ஆகஸ்ட் 04 சன்துவா பணித்தளத்தில் ஜூலை 18 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான உபவாசக்கூட்டத்தில் 50 பேர் கலந்துகொண்டனர். "பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தகூடாது" என்ற தலைப்பின் கீழ்  சகோ. பிலிப் திருக்கி அளித்த செய்திக்கு விசுவாசிகள் தங்களை ஒப்புக் கொடுத்ததுடன், பணித்தள மக்களுக்காகவும், ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் இணைந்து ஜெபித்தனர்.

ஆகஸ்ட் 05 ஹில்சா பணித்தளத்தில் ஜூலை 18 அன்று எழுப்புதல் கூட்டம் நடைபெற்றது; 55 பேர் கலந்துகொண்டு வசனத்தைக் கேட்டனர். சகோ.ஜெகன் மற்றும் சகோ. ராகேஷ் ரவி ஆகியோர் தேவசெய்தியளித்தனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஆண்டவருக்காகத் தீவிரமாய்ச் செயல்பட ஜெபித்துகொள்ளுங்கள். ராஜ்கீர் மற்றும் ராஜொலி பணித்தளங்களில் ஆலயக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவும், குராரு பணித்தளத்தில் ஊழியர் இல்லம் விரைவில் தடையின்றி கட்டிமுடிக்கப்படவும் ஜெபிப்போம்.


July 2025

                                  கிழக்குமண்டலம்



ஜுலை 01 மே 30, 31 மற்றும் ஜுன் 1 ஆகிய தினங்கள், அருவல் பணித்தளத்தில்  நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்துகொண்டு தேசத்திற்காகவும், பணித்தளத்திற்காகவும் மற்றும் சுற்றுப்புற ஜனங்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபித்தனர். போதகர் ராஜா மற்றும் சகோ. ஜெகன் ஆகியோர் வேதவசனங்களைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினர். திருவிருந்து மற்றும் அன்பின் விருந்தோடு கூடுகை நிறைவுற்றது. இப்பணித்தள சபை மற்றும் விசுவாசிகளுக்காகவும் மற்றும் இங்குள்ள ஜனங்கள் இயேசுவை கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

ஜுலை 02 மகய்-2 கோட்டத்தின் அக்பர்பூர் மற்றும் டோபி பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 105 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். பாடல்கள், குறுநாடகங்கள், வேத வினா போட்டி ஆகியவற்றைத் தொடர்ந்து, வாலிப நாட்களில் தேவன் விரும்பும் வாழ்க்கை வாழ்வது எப்படி? என்ற கருப்பொருளின் கீழ் அளிக்கப்பட்ட தேவசெய்திக்கு அநேகர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். அர்ப்பணித்தவர்கள் வரும் நாட்களில் ஆண்டவருக்கு சாட்சிகளாக வாழ ஜெபிப்போம். 

ஜுலை 03 காக்கோ பணித்தளத்தில் ஜுன் 1 அன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமின் வாயிலாக 70 பேர் பயனடைந்தனர். வரும் நாட்களில் பல்வேறு பணித்தளங்களில் இதுபோன்று நடைபெறவிருக்கும் மருத்துவ முகாம்களுக்காகவும், வருகை தரும் மக்கள் கிறிஸ்துவின் அன்பையும் அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 

ஜுலை 04 'சந்தோஷமாயிருங்கள்"என்ற தலைப்பின் கீழ், பணித்தள ஆலயங்களில் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களை நடத்தவும், பத்தாயிரத்திற்கும் அதிகமான பிள்ளைகளுக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார். விடுமுறை வேதாகமப் பள்ளியில் கலந்துகொண்ட பிள்ளைகளுக்காகவும் மற்றும் அவர்களது பெற்றோர் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 

ஜுலை 05 PEACE 1 கோட்டத்தின் ஹால்திகோட்சா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் 35 சகோதரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சகோதரி ஷப்னம் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜெபத்திலும் வழிநடத்தினார். பெண்கள் மூலமாக பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் பணித்தள பெண்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். 

ஜுலை 06  ராஜ்கீர் மற்றும் ராஜொலி பணித்தளங்களில் விரைவில் ஆலயக் கட்டுமான பணிகள் தொடங்கப்படவும் மற்றும் பணித்தள ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின்  சுகத்திற்காகவும் ஜெபிப்போம். ஜெபியுங்கள். 


June 2025

                                                      கிழக்குமண்டலம்



⏲ ஏப்ரல் 26 அன்று கூடு பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 40 பேர் கலந்துக்கொண்டனர். சகோதரி கிருபா பால்  மற்றும் சகோதரி சுஸ்மா சுயம்பர் ஆகியோர் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டு, வேத வசனங்கள் மற்றும் அனுபவச் சாட்சிகள் மூலமாக  பங்கேற்றோரை உற்சாகப்படுத்தி, ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற ஆலோசனைகளையும் வழங்கினர். 

கர்த்தருடைய பெரிய கிருபையினால், Peace-1 கோட்டத்தின் மந்தர் மற்றும்  பாலுமாத் ஆகிய பணித்தளங்களில் ஜெம்ஸ் சிக்காரியா வாலிப ஊழியர்கள் மூலமாக வாலிபர் கூட்டங்கள் நடைபெற்றறன. பாடல்கள், குறுநாடகங்கள், விளையாட்டுப்போட்டிகளுடன்  வாவிபருக்கேற்ற தெளிவான தேவசெய்தியும் வழங்கப்பட்டது. பாவம் நிறைந்த உலகில் ஆண்டவரில் எப்படி நிலை நிற்க வேண்டும் என்றும், அவருக்காகக் கனி தந்து அநேகரை அவர் பக்கம் வழிநடத்தவும் வாலிபருக்குப் போதிக்கப்பட்டது. அவ்வாறே, பான்சாரி பணித்தளத்தில் நடைபெற்றக் கூட்டத்தில், ஜெம்ஸ் பணித்தளத்தில் இரத்தசாட்சியாக மரித்த சகோதரர் மங்கள் பன்னா மற்றும் ஸ்தோவான் ஆகியோரது வாழ்க்கையின் தியாகமும் தைரியமும் கலந்துகொண்ட வாலிபர்களுக்குப் போதிக்கப்பட்டது. இக்கூட்டங்களில், 11 பேர் ஆண்டவருக்காக சேவைசெய்ய தங்களை அர்பணித்தனர்.

மே 7 மற்றும் 8 தேதிகளில் மகய்-1 கோட்ட ஊழியர்களுக்கான சிறப்பு கூட்டம்  சேக்பூரா மாவத்தில் உள்ள கட்னிகோல் பணித்தளத்தில் நடைபெற்றது. இக்கூட்டங்களில், சகோ.ராகேஷ் ரவி தேவ செய்தியளித்து ஊழியர்களை உற்சாகப்படுத்தினார்.தொடர்ந்து, சகோ. துரை மீடியா துறையை ஊழியர்கள் எவ்வாறு ஊழியத்திற்குப் பயன்படுத்த முடியும் என்று ஆலோசனை அளித்தார்.

மே மாதம் தொடக்கம் முதல், கிழக்கு மண்டலத்தின் பல்வேறு பணிகளிலும் மற்றும் கிராமங்களிலும் 15000 சிறுவர், சிறுமியர் மற்றும் மாணவர்களைச் சந்திக்கும் இலக்கோடு, விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்கள் 'சந்தோஷமாயிருங்கள்" என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றன. இவ்வூழியங்களின் வாயிலாக, அநேக சிறுவர் சிறுமியருக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் மற்றும் அவர்களை ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகப்படுத்தவும் வழிநடத்தவும் கர்த்தர் உதவிசெய்தார்.

கோடர்மா  பணித்தளத்தின் ஆங்கில வழிப் பள்ளியில், மே 12-ம் தேதி நடைபெற்ற மருத்துவ முகாம் மூலமாக ஜெம்ஸ் பள்ளியின் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் விசுவாசிகள் 90 பேர் பயனடைந்தனர். முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இலவசமாக மருந்துகளும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. சகோதரி ரீனா கோபோர்த் தலைமையில், சிக்காரியா ஜெம்ஸ் மருத்துவமனையின் குழுவினர் இந்த மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தினர்; தேவனுக்கே மகிமை !    

லத்திகார் என்ற இடத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 60 பேர் கலந்துகொண்டனர். சகோ. பால் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டு ஜனங்களை உற்சாகப்படுத்தினார்;. கூட்டம் ஆசீர்வாதமாக அமைந்தது. ஆண்டவருக்காக எழுந்து நிற்கவும் சாட்சியாக வாழவும் ஜனங்கள் தங்களை அர்ப்பணித்ததோடு, லத்திகார் மாவட்ட மக்கள் இயேசு கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஊக்கமாக ஜெபித்தனர். இப்பணித்தளத்தில், ஆலயத்திற்கான இடம் வாங்கும் பணி விரைவில் முடிய ஜெபிப்போம்.


May 2025

                                    கிழக்குமண்டலம்


மசௌடி பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 95 பேர் கலந்துகொண்டனர்; சகோ. ஜான் நாகேந்திரன் இக்கூட்டங்களில் கலந்துகொண்டு, கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கித்தார். தொடர்ந்து, அக்பர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூடுகையில் 150 பேர் கலந்துகொண்டனர்; இக்கூட்டங்களில் சகோ. ஜான் நாகேந்திரன் மற்றும் சகோ. தயானந்த் ஆகியோர் தேவ செய்தியளித்தனர். 

ஜெகனாபாத் மாவட்டத்தின் மக்தம்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில், 200-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். சகோ. ஜெயபிரகாஷ், சகோ. ராகேஷ் ரவி மற்றும் சகோ. ஜெயசீலன் ஆகியோர் இக்கூடுகையில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினர். பணித்தள ஊழியங்களுக்காகவும், தேசத்தின் தேவைகளுக்காகவும் ஒருமனதுடன் இணைந்து ஜெபிக்க கர்த்தர் உதவிசெய்தார்.

கயா பணித்தளத்தில், கிழக்கு மண்டல மிஷனரிகளின் பிள்ளைகளுக்காக நடைபெற்ற கூடுகையில் 50 பிள்ளைகள் பங்கேற்றனர். சகோ. டேனி மற்றும் சகோதரி ஜெசி ஆகியோர் சிறப்பு விருந்தினராக இக்கூடுகையில் கலந்துகொண்டு, தேவசெய்தியளித்து, குழு கலந்துரையாடல்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக பிள்ளைகளை உற்சாகப்படுத்தினர். 

மிகவும் பின்தங்கிய நிலையில் வசித்துவரும் நவ்கடி கிராமத்தின் 50 பிள்ளைகளைச் சந்திக்கவும், பாடல்கள் மற்றும் வசனங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அவர்கள் இதயத்தில் விதைக்கவும் கர்த்தர் உதவிச்செய்தார். 

நவாதா மாவட்டத்தின் ரஜௌலி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்காக, நீண்ட நாட்கள் ஏறெடுக்கப்பட்டுவந்த ஜெபத்தின் பலனால், ஆலயத்திற்கான நிலத்தினை வாங்க கர்த்தர் உதவிசெய்தார்; தேவனுக்கே மகிமை!

ஜோரியா பணித்தளத்தில் கட்டப்பட்ட ஊழியர் இல்லத்தினை ஜெபத்துடன் அர்ப்பணிக்க தேவன் கிருபை செய்தார்; இந்நிகழ்ச்சியில், பணித்தள ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் கலந்துகொண்டனர்.



April 2025

  கிழக்கு மண்டலம்




• மகதம்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 150பேர் பங்கேற்றனர்; இக்கூடுகையில், 'தேவன் விரும்புகிற வாழ்க்கை" என்றகருப்பொருளின் கீழ் சகோதரி ஜாய் ஜெயசீலன் மற்றும் சகோதரி அர்ச்சனா ராஜேஷ் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். கூடுகையின்போது நடத்தப்பட்ட விளையாட்டுகள், பகிரப்பட்ட சாட்சிகள் மற்றும் செய்திகள் பெண்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உந்துகோலாய் அமைந்தன.

• பெங்களுர் MPTC சகோதர சகோதரிகள், ஜார்க்கண்ட் மாநிலத்தின் மான்தர், கூடு மற்றும் பாலுமாத் ஆகிய பணித்தளங்களைச் சந்தித்து, பாத்தேபூர் இல்லச் சிறுவர்களை உற்சாகப்படுத்தி, பணித்தள விசுவாசிகளுக்கான சிறப்புக் கூட்டங்களிலும் பங்கேற்க கர்த்தர் உதவிசெய்தார்.

• பீஹார் மாநிலம் அர்வல் மாவட்டத்தின் டெல்பா பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான உபவாசக் கூடுகையில் 100 பேர் பங்கேற்றனர்; சகோ. ஜெயபிரகாஷ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.

• டோபி, குராரு மற்றும் டெக்காரி ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்கள் ஆசீர்வாதமாக அமைந்தன. சகோ. தயானந்தன், சகோ. ராகேஷ், சகோ. ராமாசங்கர் மற்றும் சகோ. ஜுனுராஜ் ஆகியோர் இக்கூட்டங்களில் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து, டெக்காரி தாலுகாவில் நடைபெற்ற ஊழியர்களுக்கான கருத்தரங்கில் சகோ. ராகேஷ் டேவிட் மற்றும் சகோ. ஜெயசீலன் ஆகியோர் தேவ செய்தியளித்து ஊழியங்களுக்காக ஜெபித்தனர்.

• மார்ச் 7 அன்று மான்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 90 வாலிபர்கள் கலந்துகொண்டனர். இக்கூடுகையில் சகோ. ஜெயசீலன் மற்றும் சகோ. தயானந்தன் ஆகியோர் வாலிபர்களுக்கேற்ற ஆலோசனைகளை வேத வசனத்தின் அடிப்படையில் அளித்து, ஆவிக்குரிய வாழ்க்கையின் அவர்கள் முன்னேறவும் வழிகாட்டினர்.

• பெண்கள் தினத்தைத் தொடர்ந்து, மார்ச் 9 அன்று கயா பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனையில், பாடல்வேளை, ஆராதனை மற்றும் செய்தி வேளை ஆகியவற்றை பெண்களே முன்னின்று நடத்தினர்; தேவனுக்கே மகிமை!

• ராஜ்கிர் மற்றும் ராஜொலி ஆகிய பணித்தளங்களில் விரைவில் ஆலயக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவும், லோகர்தகா பணித்தளத்தில் நடைபெறவிருக்கும் போதகர் இல்ல அர்ப்பணிப்பிற்காகவும் ஜெபிப்போம்.